செய்திகள்

கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: பெற்றோருடன் சுற்றுலாவந்த சிறுவன் மின்னல் தாக்கி பலி

Published On 2017-09-25 11:01 IST   |   Update On 2017-09-25 11:01:00 IST
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் சுற்றுலாவந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருக வாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சஞ்சீவி பத்மநாபன் (வயது 14) இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சிதம்பரம் பிச்சாவரத்துக்கு சுற்றுலா வந்தான். பின்னர் மாலையில் சஞ்சீவி பத்மநாபன் உள்பட 7 பேர் மாங்குரோவ் காடுகளை பார்ப்பதற்காக ஒரு படகில் சென்றனர்.

அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அதே படகில் கரைக்கு திரும்பினர். படகு கரைக்கு வந்ததும் ஒவ்வொருவராக படகில் இருந்து கீழே இறங்கினர். சஞ்சீவி பத்மநாபன் படகில் இருந்து இறங்கியபோது திடீரென்று அவனை மின்னல் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த சஞ்சீவி பத்மநாபனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவி பத்மநாபன் பரிதாபமாக இறந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் அருகே ரெட்டிச் சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையத்தில் மழை கொட்டியது அங்குள்ள புளியமரத்தில் மின்னல் தாக்கியது.

இதில் மரத்தடியில் மழைக்காக ஒதுங்கி நின்ற அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (51), செல்வம் (47) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பண்ருட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 1 மணி நேரம் கடும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வல்லம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 2 பசுமாடுகளும், பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்த கோபால், சாந்தி மற்றும் நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தூரை சேர்ந்த நாகப்பன் ஆகியோருக்கு சொந்தமான தலா 1 பசுமாடுகள் மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தது.

மின்னல் தாக்கியதில் பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், திருவதிகை செட்டிப்பட்டு காலனியை சேர்ந்த சங்கர் ஆகியோரின் கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்தன. அக்கப்பத்தினர் உதவியுடன் தீ உடனடியாக அனைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மழை கொட்டியது. விழுப்புரத்தில் மாலை 4 மணிக்கு வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம புறங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இந்த மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம்-புதுச்சேரி சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திண்டிவனம் காமராஜ் நகர், ஈஸ்வரன் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து அங்குள்ள மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Similar News