செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: தாயின் கழுத்தை நெரித்து கொன்ற மகன்

Published On 2017-09-24 09:36 GMT   |   Update On 2017-09-24 09:36 GMT
பண்ருட்டி அருகே தாயை கழுத்தை நெரித்து மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுசீலா(வயது45). இவர்களது மகன் ராஜசேகரன் (31).

ராஜசேகரன் அதே பகுதியை சேர்ந்த லீலாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒருவயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ராஜசேகரன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். முத்தாண்டிக்குப்பத்தில் சுசீலா மற்றும் லீலாவதி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த ராஜசேகரனிடம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தாய் சுசீலாவின் நடத்தைப்பற்றி தவறாக கூறினர். இதனால் ராஜசேகரன் மனவேதனை அடைந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜசேகரன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போதும் சிலர் அவரிடம், உன் தாயாரின் நடத்தை சரிஇல்லை என்று புகார் கூறினார்கள். இதனால் ராஜசேகரன் தனது தாய் மீது ஆத்திரம் அடைந்தார்.

நேற்று அவர் தனது தாய் சுசீலாவிடம் இது குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன் தாய் சுசீலாவை தாக்கினார். பின்னர் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார்.சிறிது நேரத்தில் சுசீலா மயங்கி கீழே விழுந்தார்.இதைப்பார்த்ததும் ராஜசேகரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் சுசீலாவை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் சுசீலா இறந்து விட்டார்.

இந்த கொலை குறித்து பேர்பெரியான்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி செந்தமிழ் செல்வன் முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் ,சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர் ஆகியோர் சுசீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாயை கழுத்தை நெரித்து மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News