செய்திகள்

கடலூரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியல்: 75 பேர் கைது

Published On 2017-02-07 13:29 IST   |   Update On 2017-02-07 13:29:00 IST
விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இன்று சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி கடலூர் உழவர் சந்தையில் மாநில குழு ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் செல்வி, தைனிஸ்மேரி, மருதவாணன், சுப்புராயன், ராஜேஷ்கண்ணன் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள் அங்கிருந்து மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

அண்ணா பாலம் அருகே சென்றபோது திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலை மறியல் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

ஆனால், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News