செய்திகள்
மாணவன் சுலைமான்

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் தவித்த 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு

Published On 2017-02-06 13:10 IST   |   Update On 2017-02-06 13:11:00 IST
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் தவித்த 8-ம் வகுப்பு மாணவன் மீட்க போலீசார் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 1 மணிக்கு ரெயில்வே போலீஸ் ஏட்டு செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர்.

அப்போது ரெயில் நிலையத்தில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் சுற்றித் திரிந்தான். சந்தேகத்தின் பேரில் அவனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தான்.

இதனால் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிறுவன் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது பெயர் சுலைமான். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எனது சொந்த ஊர். எனது தந்தை முகமது அசேன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார் .நான் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தேன். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.

மீண்டும் பள்ளிக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. என்னை என் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினர். எனவே நான் வீட்டில் 1,000 ரூபாய் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை சென்றேன்.

பின்னர் எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு நள்ளிரவில் விருத்தாலம் வந்தேன். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தேன்.

இவ்வாறு அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து சுலைமானின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மரக்காணத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்தனர். அவர்களிடம் சுலைமானை போலீசார் ஒப்படைத்தனர்.

Similar News