செய்திகள்

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்

Published On 2016-09-27 05:32 GMT   |   Update On 2016-09-27 05:32 GMT
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டில் உள்ள மாலக்குட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்று மனுநீதி நாள் முகாம் நடக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

நாங்கள் மாலக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். எங்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறியதன் பேரில் நடந்த 2009-ம் ஆண்டு எங்கள் வீடுகள் அகற்றப்பட்டு அருகே உள்ள நத்தம் என்ற இடத்தில் 20 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எங்களுக்கு போதிய குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. போர் வெல்லில் தண்ணீர் இல்லை முற்றிலும் வற்றிப்போய் விட்டது.

தண்ணீர் இல்லாத காரணத்தால் பெண்கள் 3 கி.மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது.

எனவே இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கேட்டுக் கொள்கிறோம். மேலும் சாக்கடை வசதி சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Similar News