உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது தென் ஆப்பிரிக்கா
- பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்றது.
- முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஒருகட்டத்தில் 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா அணி தத்தளித்தது. அந்த சமயத்தில் ரபாடா - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது.
மேலும் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.