கிரிக்கெட் (Cricket)

பி.பி.எல். தொடரில் பங்கேற்காத அஸ்வின்: காரணம் இதுதான்

Published On 2025-11-04 14:46 IST   |   Update On 2025-11-04 14:46:00 IST
  • 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

சென்னை:

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.

அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.

இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

Tags:    

Similar News