ஜெய் ஷா தலையீட்டுக்குப்பின் பிரதிகா ராவல் உலக கோப்பை வெற்றி பதக்கத்தை பெறுகிறார்
- கடைசி லீக் போட்டியின்போது காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகினார்.
- இதனால் சாம்பியன் கோப்பை வழங்கப்படும்போது, அவருக்கு பதக்கம் வழங்கப்படவில்லை.
மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பைக்கான இந்திய அணியில் பிரதிகா ராவல் இடம் பிடித்திருந்தார். இவர் தொடக்க வீராங்கனையாக களமிறங்கி அணிக்கு பலம் சேர்த்தார். ஏழு லீக் போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் குவித்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் எடுத்த 122 ரன்கள் இந்தியாவின் அரையிறுதி கனவை நனவாக்கியது.
ஆனால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.
உலக கோப்பை தொடரில் ஒரு அணியில் 15 பேர்தான் இடம் பெற முடியும் என்பதால், பிரதிகா ராவல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் பதக்கத்தை பிரதிகா ராவல் பெற முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் இடம்பிடித்த ஷஃபாலி வர்மாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி உடனான இந்திய வீராங்கனைகளின் சந்திப்பில் இடம் பெற்றிருந்த பிரதிகா ராவல் உலகக்கோப்பை வெற்றி பதக்கத்தை அணிருந்திருந்தார். அதேவேளையில் மற்றொரு வீராங்கனை அமன்ஜோத் பதக்கம் அணியாமல் இருந்தார். இதனால் உண்மையில் பிரதிகாவிற்கு பதக்கம் கிடைத்துவிட்டதா அல்லது அமன்ஜோத் தன்னுடைய பதக்கத்தை கொடுத்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டது..
இந்த நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலையீடு காரணமாக தனக்கான பதக்கம் வந்து கொண்டிருப்பதாக பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதிகா ராவல் கூறியதாவது:-
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் நான் அணிந்திருக்க பதக்கம் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் கொடுத்தார். அப்போது அந்த பதக்கத்தை பார்த்தபோது எனக்கு உண்மையில் கண்ணீர் வந்துவிட்டது. நான் பொதுவாக கண்ணீர் விடக்கூடிய ஆள் இல்லை. ஆனால் அந்த தருணம் என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.
அதேவேளையில் ஜெய் ஷா எனக்காக ஐசிசி இடம் பேசி பதக்கத்தை வரவைப்பதாகவும், பிரதிகா ராவலுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனவும் எங்கள் மானேஜரிடம் தெரிவித்திருந்தார். அது உறுதியாகிவிட்டது. தற்போது என்னுடைய பதக்கம் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு பிரதிகா ராவல் தெரிவித்துள்ளார்.