கோலி-ரோகித் சம்பளம் ரூ.2 கோடி குறைப்பு: இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டம்
- ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
- 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.
சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.