ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: 17 ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் சி.எஸ்.கே.வை வீழ்த்திய ஆர்.சி.பி.

Published On 2025-03-28 23:16 IST   |   Update On 2025-03-28 23:16:00 IST
  • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
  • அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

சென்னை:

ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.

சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News