null
அதெல்லாம் கட்டுக்கதை..! ஒயிட் பாலில் எச்சில் பயன்படுத்துவது குறித்து ஸ்டார்க் பதில்
- நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன்.
- வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை.
கொரோனா தொற்று காலத்தில், பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்தது. இந்த தடையை நிரந்தரமாக்கியுள்ளது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பந்து பளபளப்பாக இருக்கும் வரை நன்றாக ஸ்விங் ஆகும். இதன்மூலம் தொடக்க ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என வேகப்பந்து வீச்சாளர்கள் நினைக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் எச்சில் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருப்பதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவ்வாறு சாதகமாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் இது தொடர்பாக கூறியதாவது:-
நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன். சிலர் இது சாதகமாக இருக்கும் என சத்தியம் செய்கிறார்கள். வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை. இது ரெட் பாலில் (டெஸ்ட் போட்டி) வேறுபாட்டை ஏற்படுத்தலாம். ஒயிட்பாலில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.
இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.