IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெறுமா? - லக்னோ அணியுடன் இன்று மோதல்
- 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
- சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) கண்டுள்ளது. சொந்த மண்ணில் கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் இறங்குகிறது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (4 அரைசதத்துடன் 349 ரன்கள்) சூப்பர் பார்மில் இருக்கிறார். மிட்செல் மார்ஷ், மார்க்ரம், ஆயுஷ் பதோனியும் நல்ல பங்களிப்பை அளிக்கின்றனர். இதுவரை 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரிஷப் பண்ட் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.
5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் அடுத்தடுத்து தோற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி இதுவரை 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான கலவையை கண்டறிய முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மெச்சும் வகையில் இல்லை.
முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்துக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி தொடரில் இருந்து விலகினார். கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார். இருப்பினும் அந்த ஆட்டத்திலும் சென்னைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்னில் முடங்கியது. ஷிவம் துபே (31 ரன்), விஜய் சங்கர் (29 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களது எஞ்சி 8 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். இதனால் சென்னை அணி தனது தவறுகளை களைந்து எழுச்சி பெற எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் லக்னோ அணி தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் வலுவான லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 3 ஆட்டங்களில் லக்னோவும், ஒரு ஆட்டத்தில் சென்னையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ் அல்லது ஹிமாத் சிங், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி.
சென்னை: டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.