ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்கதேசம்
- முதல் அரையிறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
- சூப்பர் ஓவரில் வென்ற வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தோகா:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சோகன் 65 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சூர்யவன்ஷி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 15 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா போல்டானார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா 2-வது பந்தில் கேட்ச் ஆனார். இதன்மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.
சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. 2-வது பந்து வைடாக சென்றது. இதனால் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.