ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: ஆனந்தை வீழ்த்தி அர்ஜூன் எரிகைசி 'சாம்பியன்'
- ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
- அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஜெருசலேம்:
ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இஸ்ரேலில் நடந்தது.
இதன் இறுதிபோட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியனான 55 வயது விசுவநாதன் ஆனந்தை (இந்தியா) எதிர்கொண்டார். இதில் ரேபிட் பிரிவில் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
மிக துரிதமாக காய் நகர்த்தக்கூடிய 'பிளிட்ஸ்' முறையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய அர்ஜூன் எரிகைசி 45-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைசி 36-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதனால் 22 வயதான அர்ஜூன் எரிகைசி 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய அர்ஜூன் எரிகைசிக்கு ரூ.49 லட்சமும், 2-வது இடம் பெற்ற ஆனந்துக்கு ரூ.31 லட்சமும் பரிசாக கிடைத்தது.