விளையாட்டு
தோனி தலைமையின் கீழ் விளையாட ஒரு குழந்தையை போல் காத்திருக்கிறேன் - ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா ஆவல்
ஐ.பி.எல்.ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தனிப்பட்ட விருப்பமான அணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. 550-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிலையில், எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் விளையாடுவது குறித்து பல வீரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் இணைந்துள்ளார். 26 வயதான ஹூடா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார்.
எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவரது தலைமைத்துவத்தையும் போற்றுவதாகவும் ஹூடா தெரிவித்துள்ளார். தோனியின் கீழ் விளையாட விரும்பும் குழந்தை போல் நான் இருக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் தனது தனிப்பட்ட விருப்பமான அணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.கேப்டனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், தோனியின் அமைதியான நடத்தை மற்றும் அணுகுமுறை அவரை சக வீரர்களிடம் இருந்து வேறுபடுத்தியதாகவும் முன்னாள் இந்திய கேப்டனுடன் பலமுறை உரையாடியதாகவும் ஹூடா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல்.தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹூடா விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.