விளையாட்டு
ரவிசாஸ்திரி

இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினம் - ரவிசாஸ்திரி

Published On 2022-01-28 04:56 GMT   |   Update On 2022-01-28 04:56 GMT
கபில்தேவ், இம்ரான்கான் போன்ற ஆல் ரவுண்டர்களை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருப்பது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார்.

ஏற்கனவே 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார். அதன் பின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

இதையடுத்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்க உள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் அது கவுரவமாக இருக்கும். எனது திறமைக்கு ஏற்றவாறு என்னால் முடிந்த வரை நான் பங்களிக்க எப்போதும் விரும்புகிறேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருப்பது கடினமாக இருக்கும். ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்ற அடிப்படையில் ஒரு ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும். இதனால் வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் ஆக்ரோ‌ஷமாக இருப்பார். போட்டியில் வெற்றி பெறவும், விக்கெட்டை வீழ்த்தவும் முயல்வார். கபில்தேவ், இம்ரான்கான் போன்ற ஆல் ரவுண்டர்களை தவிர வேகப்பந்து வீச்சாளர்கள் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருப்பது மிகவும் அரிதாகவே இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News