செய்திகள்
பதக்கத்துடன் ஷைலி சிங் (இடது), பிரியா மோகன்.

எதிர்ப்பையும் மீறி எனது தாயார் பயிற்சிக்கு தனியாக அனுப்பினார்- தடகளத்தில் பதக்கம் வென்ற ஷைலி உருக்கம்

Published On 2021-08-26 11:22 IST   |   Update On 2021-08-26 11:22:00 IST
எனது தாயார் மன உறுதி மிக்கவர். அவரிடம் இருந்து நான் நிறைய நம்பிக்கையை பெற்றிருக்கிறேன் என்று உலக ஜூனியர் தடகளத்தில் பதக்கம் வென்ற ஷைலி கூறினார்.
புதுடெல்லி:

கென்யாவில் சமீபத்தில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்தியா 3 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. நீளம் தாண்டுதலில் ஷைலி சிங், 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் அமித் காத்ரி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பிரியா மோகன், பரத் ஸ்ரீதர், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் வெண்கலப்பதக்கமும் வென்றனர். பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

6.59 மீட்டர் நீளம் தாண்டி அசத்திய 17 வயதான ஷைலி சிங் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவரது தாயார் வினிதா தையல் தொழிலாளி. இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு தான் 3 பிள்ளைகளை வளர்க்க வேண்டி இருந்தது. அத்துடன் ரூ.3 ஆயிரம் வீட்டு வாடகையும் கொடுக்க வேண்டி இருந்ததால் மிகவும் சிரமப்பட்டார். இதற்கு மத்தியில் தடகளத்தில் ஆர்வம் காட்டிய ஷைலி பெங்களூருவில் உள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் அகாடமியில் இணைந்த பிறகு தான் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

பாராட்டு விழாவின்போது உருக்கமாக பேசிய ஷைலி சிங் ‘ தடகளத்தில் எனது பயணத்தை தொடங்கிய போது உணவு கட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன். முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் எனது திறமையை அறிந்து, என்னை பெங்களூருவுக்கு பயிற்சிக்கு அழைத்தபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். அப்போது எனது தாயாரிடம் நலம் விரும்பிகள் நிறைய பேர், ‘அவளை ஏன் தனியாக அனுப்ப வேண்டும். அது சரிப்பட்டு வராது’ என்று சொன்னார்கள். ஆனால் எனது தாயார், அவள் எனது மகள். அவளை பற்றி எனக்கு தெரியும். நான் அனுப்பி வைப்பேன் என்று கூறினார். எனது தாயார் மனஉறுதி மிக்கவர். அவரிடம் இருந்து நான் நிறைய நம்பிக்கையை பெற்றிருக்கிறேன். பெங்களூரு வந்த பிறகு தான் எனது விளையாட்டு வாழ்க்கை முறையே மாறியது’ என்றார்.

Similar News