காலி வீட்டில் அனுமதியின்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை கைது செய்த உ.பி. காவல்துறை
- ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை
- கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் வீட்டில், முன் அனுமதி இன்றி தொழுகை நடத்தியதாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பரேலி மாவட்டத்தின் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீடு மதரஸாவாகப் பயன்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அனுமதியின்றி புதிய மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும் என்று தெரிவித்து, அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.
ஹனீப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் தொழுகை நடத்த முறையான எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் பெறப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அமைதிக்குப் குந்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்குப் ஜாமீன் வழங்கப்பட்டது.