null
#IranIsraelConflict 500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த இண்டிகோ
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து பல நாடுகளில் வான்வெளி மூடப்பட்டு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
"மத்திய கிழக்கு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடங்களுக்கு பிப்ரவரி 28 முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்கள் செயல்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராந்திய முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றன, விமான அட்டவணைகளை மறுசீரமைக்கின்றன. மேலும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தியா மற்றும் அந்தந்த சர்வதேச அதிகார வரம்புகளில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றன," என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய விமான நிறுவனங்களின் 1,221 விமானங்களும், வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 388 விமானங்களும் (மார்ச் 3 வரை) ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சக வலைத்தளத்தின்படி, மார்ச் 3-ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 356 ஆகும், அதே நேரத்தில் 338 சர்வதேச விமானங்கள் நாட்டின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கின.