செய்திகள்
கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவை: ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கிய பேட்ஸ்மேன்
அயர்லாந்தில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர்கள் விளாசி பேட்ஸ்மேன் சாதனைப் படைத்துள்ளார்.
வடக்கு அயர்லாந்து கிளப் அணிகளுக்கு இடையில் எல்.வி.எஸ். டி20 தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் கிரேகாக்- பாலிமேனா அணிகள் மோதின. கிரேகாக் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கிரேகாக் முதலில் பேட்டிங் செய்து 40 ஓவர் போட்டியில் 147 ரன்கள் அடித்தது.
பின்னர் பாலிமேனா அணி சேஸிங் செய்தது. கிரேகாக் அணியின் துல்லியமான பந்து வீச்சால் பாலிமேனா அணியால் 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களே அடிக்க முடிந்தது.
இதனால் கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பாலிமேனா அணியின் கேப்டன் எதிர்கொண்டார். கடைசி ஓவரில் 35 ரன்கள் அடிப்பது கடினம். அதனால் சாம்பியன் கோப்பை நமக்குதான் என கிரேகாக் அணியின் வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் பாலிமேனா கேப்டன் ஜான் கிளாஸ் கடைசி ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெறவைத்தார்.
கடைசி ஓவரில் 36 ரன்கள் விளாசி 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல், ஜான் கிளாஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.