செய்திகள்
விருதுகளுடன் பும்ரா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா

Published On 2020-01-13 08:32 GMT   |   Update On 2020-01-13 08:32 GMT
பிசிசிஐ-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கான விருதுகளை தட்டிச் சென்றார் பும்ரா.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இதன்படி 2018-19-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சி.கே. நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த், முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீகாந்த், தேர்வு குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அஞ்சும் ஜோப்ரா, ஒரு நாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிறந்த சர்வதேச வீராங்கனை விருது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருது மயங்க் அகர்வால், சிறந்த அறிமுக வீராங்கனை விருது ஷபாலி வர்மா ஆகியோருக்கு கிடைத்தது.

2018-19-ம் சீசனில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதை புஜாராவும், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான விருதை பும்ராவும் தட்டிச் சென்றனர்.

இதேபோல் அந்த சீசனில் பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மந்தனா, அதிக விக்கெட் கைப்பற்றிய ஜூலன் கோஸ்வாமி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விழாவில் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News