செய்திகள்

போட்டி ‘டை’ ஆனதால் கதறி அழுத சிறுவனை ஆறுதல் படுத்திய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Published On 2018-09-26 14:19 GMT   |   Update On 2018-09-26 14:19 GMT
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் ‘டை’ ஆனதால் கண்ணீர் விட்டு கதறிய சிறுவனுக்கு ரஷித் கான், ஷேசாத் ஆறுதல் கூறினார்கள். #INDvAFG #AsiaCup2018
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரை சந்தித்த ஜடேஜா முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்கவில்லை. 2-வது பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். இதனால் கடைசி நான்கு பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும், 4-வது பந்தில் கலீல் அகமது ஒரு ரன்னும் எடுத்தனர்.

இதனால் ஸ்கோர் 252 என சமநிலைப் பெற்றது. கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சந்தித்தார். கைவசம் விக்கெட் இல்லாததால் ரசிகர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். ஜடேஜா ஒரு ரன் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.



இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான் மற்றும்  முகமது ஷேசாத் ஆகியோர் அறுதல் கூறினார்கள்.

அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சிறுவனுக்கு ஆறுதல் கூறிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Tags:    

Similar News