செய்திகள்

அம்பதி ராயுடுவின் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை

Published On 2018-05-13 14:06 GMT   |   Update On 2018-05-13 14:06 GMT
அம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை துவம்சம் செய்து 2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvSRH
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார்.



அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.



18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோரை சமன் செய்தது. அடுத்த பந்தில் டோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
Tags:    

Similar News