இந்தியில் வைக்கப்பட்டிருந்த சர்வதேச யோகா விழா பேனரை கருப்பு மை பூசி அழித்த காட்சி.
சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு - இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு
- ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
- மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) சர்வதேச யோகா மஹோற்சவ விழா நடக்கிறது.
புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் திருவிழாவில் கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பர பேனர்கள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சந்திப்பு, அண்ணா சிலை, காமராஜர் சிலை, இந்திராகாந்தி சிலை, ராஜீவ் சிலை சதுக்கங்கள் மற்றும் கிராம பகுதிகளில் இந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளன. தமிழில் எங்கும் விளம்பர பேனர் இல்லை.
புதுவையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ஆயூஷ் பின்பற்றவில்லை. ஆனால் யோகா விளம்பரத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்டுத்தி உள்ளது.
இந்த நிலையில் யோகா நாள் விழாவிற்காக சிவாஜி சிலை அருகே அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்தி விளம்பர பலகைகளில் இந்தி மொழியை புதுவை மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழை புறக்கணிப்பு செய்வதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.