இந்தியா

எடியூரப்பா

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்கமுடியாது - எடியூரப்பா உறுதி

Published On 2023-02-04 22:54 GMT   |   Update On 2023-02-04 22:54 GMT
  • சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
  • பா.ஜ.க. கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜ.க. கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் உயர்நிலை குழு உறுப்பினருமான எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 10 அல்லது 12-ம் தேதிக்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 140 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி யார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தாங்கள் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தனித்தனியாக யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

ராகுல் காந்தி உங்கள் தலைவரா? எங்கள் கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமையில் கர்நாடகம் உள்பட வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

நமது கட்சியினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை நீங்கள் செய்தால், நமது கட்சி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

அதிகாரம், பணம், படை பலம், மது, சாதி, மதம், வெறுப்புகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசின் நாட்கள் முடிந்துவிட்டது. அது தற்போது எடுபடாது என கூறினார்.

Tags:    

Similar News