இந்தியா

பாம்பு கடித்து பலியான ஜசாப்கான்.

5 நாட்களில் 2 முறை கடித்தது: பாம்பு கடித்து பலியான தொழிலாளி

Published On 2023-07-01 04:55 GMT   |   Update On 2023-07-01 04:55 GMT
  • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
  • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

ஜெய்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

Tags:    

Similar News