நான் வேற என்ன செய்றது?: முதல் மந்திரி பதவி குறித்து டி.கே.சிவகுமார்
- முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும் என்றார் சித்தராமையா.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டு முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவில் முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறைபோல் உறுதியாக ஆட்சியில் இருக்கும். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார், எனக்கு என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அவரை (சித்தராமையா) ஆதரிக்க வேண்டும். எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. கட்சி உயர்மட்டம் என்ன சொன்னாலும், அது என்ன விரும்பினாலும், அது நிறைவேறும் என தெரிவித்தார்.