வன்முறை மனதை உடைக்கிறது.. நேபாளத்தில் அமைதி திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தல்
- நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
- இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நேபாளத்தில் அமைதி திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.
நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதை உடைக்கிறது. பல இளைஞர்களின் உயிரிழப்புகளால் என் இதயம் மிகவும் வருத்தமடைந்துள்ளது.
நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிகவும் முக்கியம். அமைதியையும் ஒழுங்கையும் கைக்கொள்ளுமாறு நேபாளத்தின் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.