மதுரா ரெயில் விபத்துக்கு இது தான் காரணம்.. வெளியான சி.சி.டி.வி. காட்சிகள்
- ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
- இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரெயில் பிளாட்ஃபாரத்தின் மீது ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ரெயில் விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதன்படி ரெயிலை இயக்கி வந்த லோக்கோ பைலட், ஒருகட்டத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும், சில நொடிகளில் மற்றொரு லோக்கோ பைலட் ரெயிலில் ஏறுகிறார்.
ஏறும் போதே தனது மொபைல் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த அவர் உள்ளே நுழைந்ததும், கதவை இழுத்து மூடினார். பிறகு, உள்ளே வந்த அவர் தனது பையை ரெயிலை இயக்கும் ஸ்விட்ச் மீது வைத்து, தொடர்ச்சியாக மொபைல் போனை பயன்படுத்துகிறார். இந்த சூழலில் தான் திடீரென ரெயில் வேகமெடுத்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் ரெயிலை நிறுத்தும் முன்பு அது, பிளாட்ஃபாரத்தின் மீது ஏறியது. இதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.