இந்தியா

பிரதமர் மோடி பொதுக்கூட்ட பகுதியில் 'டிரோன்' பறக்க விட்ட 3 பேர் கைது

Published On 2022-11-25 09:56 GMT   |   Update On 2022-11-25 09:56 GMT
  • சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர்.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே டிரோன்கள் பறக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார்.

புதுடெல்லி:

குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் 4 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

நேற்று மாலை அகமதாபாத்தின் பாவ்லா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே டிரோன்கள் பறக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மர்ம டிரோன் ஒன்று பறந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி டிரோன்களை பறக்க விட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தங்களின் தனிப்பட்ட நோக்கத்துக்காக பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தை டிரோனில் வீடியோ எடுப்பதற்காக அதை அனுப்பி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News