இந்தியா

கேரளாவில் காங்கிரஸ்- சி.பி.எம்.-ஐ விரட்டியடிக்க வேண்டும்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2024-04-18 08:46 GMT   |   Update On 2024-04-18 08:46 GMT
  • கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
  • ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மேலும் அவர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர்கள் கேரளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காசர்கோடு, கண்ணூர் மற்றும் வடகரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்க ராமர் பற்றிய கருத்து மட்டுமே முடியும். ஸ்ரீராமன் இறைவன் மட்டுமல்ல. அவர் ஒரு கலாச்சார நாயகன். காங்கிரஸ் ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதை ஏற்றுக்கொள்வது கடினம்.

ராமரை எதிர்ப்பவன் விரட்டியடிக்கப்படுவான் என்பது நாட்டின் வரலாறு. கூடாரத்தில் இருந்த ராமரை அயோத்தியில் உள்ள கோவிலுக்கு பா.ஜ.க. அழைத்து வந்தது. சி.ஏ.ஏ.-ன் கீழ் எந்த ஒரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வரும்.

கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதற்காக காங்கிரசையும், சி.பி.எம்.-ஐயும் விரட்டியடிக்க வேண்டும். ஒருமுறை வெளியே சென்றால் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். இரட்டை ஆட்டம் ஆடுகிறார்கள். டெல்லியில் நட்புடன் இருக்கும் அவர்கள் கேரளாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார். இது கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News