இந்தியா

சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தம்- கர்நாடகா வந்தார் ராகுல் காந்தி

Published On 2023-03-20 08:29 GMT   |   Update On 2023-03-20 09:37 GMT
  • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
  • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பெங்களூர்:

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஏற்கனவே பா.ஜ.க. சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடக  மாநிலத்திற்கு வந்துள்ளார். பெலகாவியில் காங்கிரசின் இளைஞர் புரட்சி மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதன் மூலம் ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் அவர் வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. பெலகாவி நிகழ்ச்சிக்கு பின்னர் பெங்களூரு வரும் ராகுல் காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையடுத்து, மைசூர் செல்லும் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரசின் செயல் தலைவராக இருந்து மறைந்த துருவநாராயணின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். ராகுல் காந்தியின் வருகை கர்நாடக காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News