இந்தியா

குஜராத் சட்டசபை தேர்தல்- தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி

Published On 2022-12-04 14:10 GMT   |   Update On 2022-12-04 14:10 GMT
  • இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
  • நாளை குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.

குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக கடுமையாக போராடியது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

நாளை குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி குஜராத் வந்தடைந்தார். தொடர்ந்து, காந்தி நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அங்கு அவரது தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் மோடி சிறிது நேரம் உரையாடினார்.

Tags:    

Similar News