இந்தியா

திருப்பதி அலிபிரி நடைபாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை

Published On 2022-08-17 10:43 IST   |   Update On 2022-08-17 14:01:00 IST
  • திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது.
  • வனப்பகுதியை ஒட்டி இந்த கல்லூரி உள்ளதால் அடிக்கடி வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வழக்கம்.

திருப்பதி:

திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

வனப்பகுதியை ஒட்டி இந்த கல்லூரி உள்ளதால் அடிக்கடி பாம்பு, சிறுத்தை மற்றும் வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் விடுதியில் உணவு அருந்திவிட்டு வழக்கம் போல் தூங்க சென்றனர். அப்போது திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. மாணவர்கள் கல்லூரி விடுதியில் மாடியில் இருந்து பார்த்தபோது வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக திரிந்து கொண்டு இருந்தது.

இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர் சில மாணவர்கள் ஓடி வந்து கதவு, ஜன்னலை மூடிவிட்டு அறைக்குள் இருந்தனர். நாய்கள் விரட்டியதால் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது.

இது குறித்து மாணவர்கள் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை எங்காவது பதுங்கி உள்ளதா என சோதனை செய்தனர். கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

பக்தர்கள் நடைபாதையாக செல்லும் அலிப்பிரி அருகே கால்நடை மருத்துவக் கல்லூரிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருப்பதி மலை பாதையில் போலீசார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் பைக்கில் சென்றபோது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கியது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News