இந்தியா
null

கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு

Published On 2024-03-04 07:04 GMT   |   Update On 2024-03-04 11:15 GMT
  • டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெங்களூர்:

கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இதை குடிநீர் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகளவில் வசூல் செய்து வருகின்றனர். இதுவரை 12ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரி ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் ரூ.1800 முதல் ரூ.2ஆயிரம் வரை வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடிநீர் டேங்கர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

இதுகுறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறும்போது, பெங்களூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யும் டேங்கர்களை மாநில அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் பெங்களூரில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எனது துறை மானியத்தில் இருந்து ஏற்கனவே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதுதொடர்பான சிறப்பு கூட்டம் இன்று மதியம் நடத்தப்படும் என்றார்.

இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு பகுதியில் 60 டேங்கர் லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ள நிலையில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருவதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அனுமதி இன்றி இயக்கப்படும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags:    

Similar News