இந்தியா

பிரதமர் மோடி 3-வது தடவையாக போட்டியிடும் வாரணாசி தொகுதி விழாக்கோலம் பூண்டது

Published On 2024-05-27 07:24 GMT   |   Update On 2024-05-27 07:53 GMT
  • வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
  • வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி களம் இறங்கி இருக்கிறார். கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதன் பிறகு 2 தடவை அங்கு வாகன பேரணி நடத்தி பிரசாரம் செய்தார்.

மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மீண்டும் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.

என்றாலும் வாரணாசியில் பிரதமர் மோடி எளிதாக வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

2014-ம் ஆண்டு முதல் முதலாக அவர் வாரணாசியில் களம் இறங்கிய போது 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை தோற்கடித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவை 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தடவை 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வாரணாசி தொகுதி முழுக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஓசையின்றி பா.ஜ.க. தீவிர பிரசாரம் செய்து வருகிறது.


தற்போது பிரசாரம் ஓய்வதற்கு 3 நாட்களே இருப்பதால் அங்கு பா.ஜ.க. வின் நட்சத்திர பேச்சாளர்கள் செல்ல தொடங்கி உள்ளனர். நேற்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் சென்றனர்.

இன்று மாலை மத்திய மந்திரி அமித் ஷா வாரணாசி செல்ல இருக்கிறார். நாளை பா.ஜ.க. தலைவர் நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் வாரணாசியில் களம் இறங்க உள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி தேர்தல் திருவிழாவை பிரதிபலிக்கும் வகையில் கோலாகலமாக மாறி உள்ளது.

வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளையும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அடுத்து வரும் கடைசி 2 நாட்களில் வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

வாரணாசி தொகுதியை பிரதமர் மோடி சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கும் நிலையில் வளர்ச்சி திட்டப் பணிகளை மக்களுக்கு தெரிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

Tags:    

Similar News