இந்தியா

முந்தைய அரசைவிட வேலை வாய்ப்புகளை 1.5 மடங்கு அதிகமாக வழங்கி உள்ளோம்- பிரதமர் மோடி

Published On 2024-02-12 08:10 GMT   |   Update On 2024-02-12 08:10 GMT
  • இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
  • இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள்.

புதுடெல்லி:

வருவாய்த்துறை, உயர் கல்வித்துறை, பாதுகாப்பு துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளிலும், மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களிடம் பணிபுரிய புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.

ரோஸ்கர் மேளாவின் கீழ் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு விளம்பரம் முதல் நிறைய நேரம் எடுக்கப்பட்டது. காலதாமதத்தை பார்த்து லஞ்சம் பயன்படுத்தப்பட்டது. நாங்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பு செயல்முறையை வெளிப்படைத் தன்மையுடன் செய்கிறோம்.

உழைத்தால் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிவார்கள். 2014 முதல் இளைஞர்களை இந்திய அரசாங்கத்துடன் இணைந்து அவர்களை வளர்ச்சியில் பங்கேற்பதற்காக மாற்ற முயற்சித்து வருகிறோம். தற்போது இளைஞர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள்.

முந்தைய 10 ஆண்டுகால அரசைவிட 1.5 மடங்கு வேலை வாய்ப்புகளை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு வழங்கியுள்ளது. 1.25 லட்சத்துக்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்களுடன் இந்த துறையில் இந்தியா 3-வது பெரிய சுற்றுசூழல் அமைப்பாக உள்ளது. இளைஞர்கள் சிறிய நகரங்களில் கூட புதிய நிறுவனங்களை தொடங்குகிறார்கள். இது லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News