இந்தியா

பதில் அளிக்கவில்லை என்றால் ஆட்சியை கலைக்க பரிந்துரை: பங்சாப் மாநில அரசுக்கு கவர்னர் எச்சரிக்கை

Published On 2023-08-26 06:18 GMT   |   Update On 2023-08-26 06:18 GMT
  • குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்
  • அரசியலமைப்பின் கீழ் கவர்னருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்

பா.ஜனதா அல்லாத கட்சி ஆட்சி செய்து வரும் பல மாநிலங்களில், அம்மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சிக்கும், அம்மாநில கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு பகவந்த் மான் அரசு சார்பில் பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்து கவர்னர் பல்வாரிலால் புரோகித் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "நான் எழுதிய கடிதத்திற்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை என்றால், அரசியலமைப்பு எந்திரம் தோல்வியடைந்ததாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்வேன். மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-ன்படி கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்து செய்யப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், "அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். உங்களை எச்சரிக்கிறேன் மற்றும் எனது கடிதங்களுக்கு பதிலளிக்கவும், கோரப்பட்ட தகவல்களை எனக்கு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News