இந்தியா

பா.ஜனதா, பி.ஆர்.எஸ்., ஏஐஎம்ஐஎம் ஆகிய மூன்றும் கூட்டு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Published On 2023-11-20 00:15 GMT   |   Update On 2023-11-20 00:15 GMT
  • பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர்.
  • தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது. பா.ஜனதாவும் களத்தில் உள்ளது.

ஓவைசி காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி, ஓவைசி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா, பி.ஆர்.எஸ்., ஏஐஎம்ஐஎம் மூன்றும் கூட்டு என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "பா.ஜனதாவும், சந்திரசேகர ராவும் கைகோர்த்து உள்ளனர். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. அதுவும் பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

ஆனால், தெலுங்கானாவில் 119 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஏன் 9 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தெலுங்கானாவில் பிஆர்எஸ்-க்கு ஓவைசி ஆதரவு கொடுக்கிறார். டெல்லியில் பா.ஜனதாவுக்கு பிஆர்எஸ் ஆதரவு அளிக்கிறது. மூன்று கட்சிகளுக்கும் இடையில் சிறந்த கூட்டு உள்ளது. நீங்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ்-க்காக வாக்களித்ததாகும். ஓவைசி கட்சிக்கு வாக்களித்தால் அது பிஆர்எஸ்-க்கு வாக்களித்ததாக அர்த்தமாகும்.

பிரதமர் மோடி பிஆர்எஸ் அரசின் பாசனத் திட்டம் மற்றும் மதுபான மோசடி குறித்து பேச மறுக்கிறார். ஆனால், ஏஜென்சிகளை காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு விசாரணைக்காக அனுப்புகிறார்" என்றார்.

Tags:    

Similar News