இந்தியா

வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர்... நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்- மோடியிடம் கூறிய தொழிலாளர்

Published On 2023-11-29 05:22 GMT   |   Update On 2023-11-29 06:21 GMT
  • சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • அவர்களுடன் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாநிலத்தில் அமைக்கப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் திடீரென விபத்து (நிலச்சரிவு) ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்றது. இறுதியில் நேற்றிரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உடல் பரிசோதனைக்காக 41 தொழிலாளர்களும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசினார்.

அப்போது ஒரு தொழிலாளர் "நீங்கள் பிரதமராக இருக்கும்போது, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர். அப்படியிருக்கும்போது, நாங்கள் உள்நாட்டில்தான் சிக்கியிருந்தோம். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை" என அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் மோடியுடன் தெரிவித்தார்.

பின்னர் பிரதமர் மோடி தொழிலாளர்களிடம் கூறியதாவது:-

17 நாட்கள் என்பது குறைந்த நேரம் கிடையாது. ஒருவருக்கு ஒருவர் தைரியத்தை வெளிக்காட்டியிருப்பீர்கள். என்னுடைய பிரதமர் அலுவலக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களிடம் இருந்து தகவலை பெற்ற போதிலும், கவலை மட்டும் குறையவில்லை.

அதிக நாட்கள் அபாயத்தை சந்தித்த பிறகு, பாதுகாப்பாக மீட்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஒருவேளை மோசமான நிலை ஏற்பட்டிருந்தால், அதை நாங்கள் எப்பது எடுத்துக் கொண்டிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. கடவுள் ஆசியால் நீங்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளீர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடியிடம் பேசிய மற்றொரு தொழிலாளர் "நாங்கள் சசோதரர்கள் போன்று ஒன்றாக இருந்தோம். இரவு சாப்பிட்ட பிறகு சுரங்கத்திற்குள் உலா வந்தோம். காலையில் எழுந்து நடக்க வேண்டும். யோகா செய்ய வேண்டும் என சொல்வேன். உத்தரகாண்ட் மாநில அரசு குறிப்பாக முதலமைச்சர், வி.கே. சிங் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்" என்றார்.

Tags:    

Similar News