search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttarkashi Tunnel"

    • சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அவர்களுடன் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாநிலத்தில் அமைக்கப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் திடீரென விபத்து (நிலச்சரிவு) ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்றது. இறுதியில் நேற்றிரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    உடல் பரிசோதனைக்காக 41 தொழிலாளர்களும் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பேசினார்.

    அப்போது ஒரு தொழிலாளர் "நீங்கள் பிரதமராக இருக்கும்போது, வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் காப்பாற்றப்பட்டனர். அப்படியிருக்கும்போது, நாங்கள் உள்நாட்டில்தான் சிக்கியிருந்தோம். நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை" என அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் மோடியுடன் தெரிவித்தார்.

    பின்னர் பிரதமர் மோடி தொழிலாளர்களிடம் கூறியதாவது:-

    17 நாட்கள் என்பது குறைந்த நேரம் கிடையாது. ஒருவருக்கு ஒருவர் தைரியத்தை வெளிக்காட்டியிருப்பீர்கள். என்னுடைய பிரதமர் அலுவலக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களிடம் இருந்து தகவலை பெற்ற போதிலும், கவலை மட்டும் குறையவில்லை.

    அதிக நாட்கள் அபாயத்தை சந்தித்த பிறகு, பாதுகாப்பாக மீட்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஒருவேளை மோசமான நிலை ஏற்பட்டிருந்தால், அதை நாங்கள் எப்பது எடுத்துக் கொண்டிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. கடவுள் ஆசியால் நீங்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அப்போது பிரதமர் மோடியிடம் பேசிய மற்றொரு தொழிலாளர் "நாங்கள் சசோதரர்கள் போன்று ஒன்றாக இருந்தோம். இரவு சாப்பிட்ட பிறகு சுரங்கத்திற்குள் உலா வந்தோம். காலையில் எழுந்து நடக்க வேண்டும். யோகா செய்ய வேண்டும் என சொல்வேன். உத்தரகாண்ட் மாநில அரசு குறிப்பாக முதலமைச்சர், வி.கே. சிங் ஆகியோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்" என்றார்.

    • 17 நாட்களுக்குப் பிறகு 41 தொழிலாளர்கள் நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கடைசி 12 மீட்டர் தூரம் கைகளால் தோண்டப்பட்டு மீட்புக்குழுவினர் தொழிலாளர்களை சென்றடைந்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டனர். சுமார் 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரதமர் பிரமர் மோடி டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

    மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞரும் ஒருவர். அவர் சுரங்கபாதைக்குள் சிக்கியது குறித்து கூறுகையில் "முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது. அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கும். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது.

    எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பண உதவி நிதி வழங்கப்படும். சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • இறுதிக்கட்ட துளையிடும் பணியில் எலி வளை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
    • சுமார் 20 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை துளையிட்டு மீட்புப்பணிக்கு விரைவாக முடிவடைய உதவி செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.

    கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள். இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.

    எலி வளை சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை பார்த்ததும் எளிதாக தோண்டிவிடலாம் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் தங்களது பணியை தொடங்கினர். ஒருவர் உள்ளே சென்று இடிபாடுகளை மண்வெட்டி மற்றும் கைகளால் எடுத்து வெளியே அனுப்ப வேண்டும். வெளியில் இருப்பவர்கள் அதை இழுப்பு கையிறு மூலம் வெளியே கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர்கள் இடிபாடுகளை வெளியே கொண்டு வந்தனர். சுமார் 18 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை தோண்டி அசத்தினார்கள்.

    சிறப்பாக தோண்டி சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்தனர். எலி வளை தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்ததும், ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழு அதிகாரி ஒருவர் "எலி வளை தொழிலாளர்களின் செயல் எதிர்பார்ப்பை மீறிய செயலாகும். 18 மணி நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் வரை தோண்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் 10 மீட்டர் வரை தோண்டினர்." என்றார்.

    யார் இந்த எலி வளை தோண்டும் தொழிலாளர்கள் (Rat-Hole Miners)

    வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் அதிகமாக இருக்கும். மேல்மட்டத்தில் குறுகிய விட்டம் கொண்ட அளவில் குழி தோண்டுவார்கள். ஒருவர் உள்ளே சென்று மண்ணை வெளியே எடுத்து அனுப்ப, வெளியே இருப்பர்கள் அதை அப்புறப்படுத்துவார்கள்.

    நிலக்கரி இருக்கும் இடத்தை அடைந்ததும், உள்ளே பக்கவாட்டில் குடைந்து குழியை விரிவுப்படுத்துவார்கள். அதன்பின் நிலக்கரியை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் நிலக்கரியை இந்த குழி வழியாக வெளியே அனுப்புவார்கள். அந்த குழி வழியாக நிலக்கரியை வெளியே எடுக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு குறுகிய குழி 800 மி.மீ. விட்டத்தை விட சிறியதாக இருப்பதால் எலி வளை போன்று காணப்படும். இதனால் எலி வளை சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டனர்.

    இது மிகவும் ஆபத்தானது. ஒருவேளை நிலச்சரிவு ஏற்பட்டாலோ, மழை பெய்தாலோ சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்பது மிகவும் கடினம். அவர்களது உடலைக்கூட மீட்க முடியாது. இவ்வாறு சில துயர சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும், இதில் சிறுவர்களும் பயன்படுத்தப்படுவார்கள். இதனால், எலி வளை சுரங்கத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    தடைவிதிக்கப்பட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு மிகப்பெரிய மீட்பு பணி வெற்றி அடைந்துள்ளது. தடை செய்யப்பட்டது என்றாலும், அவர்களது அனுபவம், திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் முழு வீச்சில் துளையிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • செங்குத்தாக துளையிடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலை பகுதியில் 4.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ந்தேதி தீபாவளி தினத்தன்று காலை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 57 மீட்டர் தூரத்துக்கு இடிந்ததால் சுரங்கப் பாதையின் மையப்பகுதிக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க 57 மீட்டர் இடிபாடுகளுக்குள் குழாய்களை செலுத்தி மீட்கும் பணி நடந்தது. முதல் தடவை நடந்த முயற்சியில் எந்திரம் பழுது அடைந்ததால் அதிநவீன ஆகர் எந்திரம் கொண்டு வரப்பட்டு துளையிட்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது.

    47 மீட்டர் தூரத்துக்கு துளையிட்டு குழாய் அமைக்கப்பட்ட நிலையில் ஆகர் எந்திரத்தின் துளையிடும் பிளேடுகள் வெடித்து சிதறி நொறுங்கி போனதால் மீட்பு பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மலை உச்சியில் இருந்து துளை போட்டு 41 தொழிலாளர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மலை உச்சியில் சாலை அமைக்கப்பட்டு நவீன எந்திரம் கொண்டு செல்லப்பட்டது. 2 இடங்களில் இருந்து துளைபோட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை மலை உச்சியில் இருந்து செங்குத்தாக சுரங்கப்பாதை நோக்கி துளையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

    மலை உச்சியில் இருந்து 41 தொழிலாளர்களும் சிக்கி இருக்கும் சுரங்கப்பாதை சுமார் 87 மீட்டர் தூரம் கொண்டதாக உள்ளது. அங்கு இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு வருகிறது.

    அப்படி துளையிடும் பகுதியில் 700 மி.மீட்டர் சுற்றளவு கொண்ட இரும்பு குழாய்களை உள்ளே செலுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை 38 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து செங்குத்தாக துளை போடப்பட்டு உள்ளது.

    இன்னமும் 49 மீட்டர் தூரத்துக்கு மலை உச்சியில் இருந்து துளைபோட வேண்டியது உள்ளது. இன்னும் 4 நாட்கள் அதற்கு தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பக்கவாட்டில் கிடைமட்டமாக துளைபோடும் பணியில் சிக்கி இருந்த ஆகர் எந்திரத்தை அகற்றும் பணிகள் நடந்து வந்தன. இன்று காலை அந்த எந்திரம் முழுமையாக அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பாதையில் ஆட்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கி உள்ளது.

    கிடை மட்டத்தில் சுமார் 57 மீட்டர் தூரத்துக்கு சுரங்க பாதைக்குள் பாறைகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் ஆகர் எந்திரம் மூலம் 47 மீட்டருக்கு துளையிட்டு குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த குழாய் வழியாக 2 வீரர்கள் உள்ளே சென்று தொடர்ந்து அங்கு தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ஒரு வீரர் துளையிடும் பணியை மேற்கொள்வார். மற்றொருவர் அந்த இடிபாடு கழிவுகளை வெளியில் அள்ளும் பணியில் ஈடுபடுவார். இந்த பணியில் எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இப்படி ஆட்கள் மூலம் துளைபோடும் பணி சுமார் 10 முதல் 12 மீட்டர் தூரத்துக்கு செய்ய வேண்டியிருந்த நிலையில் நேற்று அந்த பணி தொடங்கியது. இன்று 2-வது நாளாக ஆட்கள் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இன்று மேலும் 4 பேர் இணைக்கப்பட்டு 6 பேர் குழுவினர் 60 சென்டிமீட்டர் விட்டமுள்ள குழாய் மூலம் சென்று துளையிடும் பணியில் ஈடுபட்டனர்.

    57 மீட்டர் தூரத்தில் இன்று மதியம் வரை 54 மீட்டர் தூரத்துக்கு தோண்டி விட்டனர். இன்னும் 3 மீட்டர் தூரமே தோண்ட வேண்டியது இருக்கிறது. மிக குறைந்த தூரமே இருப்பதால் கிடை மட்டத்தில் துளையிட்டு விரைவில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இன்று 17-வது நாள் நடக்கும் பணிகள் இறுதி கட்ட பணிகளாக கருதப்படுகிறது. 41 தொழிலாளர்களையும் மீட்பு குழுவினர் நெருங்கி உள்ளனர். இன்னும் சில மணி நேரத்துக்குள் கிடைமட்ட சுரங்கப்பாதை மூலம் 41 தொழிலாளர்களையும் சென்றடைய முடியும் என்று மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே மேலும் 4 இடங்களில் இருந்து 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ள சுரங்கப்பாதை நோக்கி துளை போடும் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 6 விதமாக துளை போடப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த பாதையில் முதலில் பணிகள் நிறைவு பெறுகிறதோ அதன் வழியாக 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


     இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கி சில்க்யாரா மலைப்பகுதியில் இன்று முதல் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பிறபகல் முதல் அங்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மீட்பு பணி நடைபெறும் இடத்துக்கு சென்றார். அங்கு 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்தார்.

    அவரை பிரதமர் மோடி தொடர்புகொண்டு பேசினார். அப்போது இறுதிகட்ட பணிகள் தொடர்பான விவரங்களை, முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம், பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    தற்போது செங்குத்தாக துளையிடும் பனி நிறுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் துளையிடும் எலி வளை தொழிலாளர்கள் மூலம் துளையிடும் பணியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ×