உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
- அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.
இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.