இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் மீதுதான் ஆசை- ஏழைகளின் பசியைப் பற்றி கவலையில்லை: பிரதமர் மோடி

Published On 2023-08-10 12:29 GMT   |   Update On 2023-08-10 12:38 GMT
  • 2024ம் ஆண்டில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.
  • உலக நாடுகள் நம்மை பாராட்டும் தருணத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது பதிலுரையை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

2024ம் ஆண்டில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்டமுன் வரைவுகளை கொண்டு வந்துள்ளோம். சட்டமுன் வரைவுகள், மீனவர்கள் மசோதா தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்கவில்லை.

வரும் காலம் தொழில்நுட்பத்தின் காலமாக அமையும். பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்திற்காக பல சட்டமுன் வரைவுகளை கொண்டு வந்தோம்.

கடந்த 3 நாட்களாக பல்வேறு மூத்த தலைவர்களும் மக்களவையில் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சியினருக்கு நாட்டைவிட அவர்களது கட்சி தான் முக்கியமாக உள்ளது. எதிர்க்கட்சியினருக்கு ஏழைகளின் பசியை பற்றி கவலையில்லை, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற பசிதான் உள்ளது.

எதிர்க்கட்சியினர் ஒரு நாள் கூட அவையை நடத்தவில்லை. நீங்கள் பொய்யானவர்கள், உங்கள் நம்பிக்கையில்லா தீர்மானமும் பொய்யானது.

என்னை அவைக்கு வரவழைப்பதற்காக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தீர்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியினர் வெறும் நோ பால்களே வீசினர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேச எதிர்க்கட்சியினர் கொஞ்சம் தயாரித்து கொண்டு வந்திருக்கலாம்.

ஒவ்வொரு முறையும் இந்த தேசத்திற்காக எதிர்க்கட்சியினர் நல்லதை செய்யவில்லை.

இந்த தீர்மானத்தில் பேசப்பட்ட விஷயங்கள் ஆச்சரியமானது. நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.

இந்த முறை விவாதத்தை தொடங்கி வைக்க எதிர்க்கட்சி தலைவருக்கே சொந்த கட்சியினர் நேரம் கொடுக்கவில்லை.

கூடுதலாக நேரம் கொடுத்தும், நேரத்தை வீணடித்துவிட்டனர் காங்கிரஸ் கட்சியினர். நேரத்தை வீணடிப்பதில் அவர்கள் வல்லவர்கள்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் அதிர் ரஞ்சன் சவுத்திரியை அவமானப்படுத்துகிறது. அதிர் ரஞ்சன் சவுத்திரிக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்.

எங்கள் அரசு செய்துள்ள பணிகள் 100 ஆண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது நாட்டிற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான காலகட்டம். இந்த யுகம் இந்தியாவிற்கு பொன்னான யுகம்.

நாட்டில் உள்ள இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலேயே நமது கவனம் இருக்க வேண்டும்.

உலகம் இந்தியாவை புரிந்து கொண்டுள்ளது. உலக நாடுகள் நம்மை பாராட்டும் தருணத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஏழைகளுக்கு தங்கள் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மக்களின் நம்பிக்கையை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவை பல புதிய உச்சங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளோம். இன்று இந்தியாவின் ஏற்றுமதி புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News