இந்தியா

வக்பு சட்டம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்- பிரதமர் மோடி

Published On 2025-04-04 09:20 IST   |   Update On 2025-04-04 14:35:00 IST
  • பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது.
  • ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.

அரசுமுறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டுத் தேடலில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது.

நீண்ட காலமாக குரல்கள் அற்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கும், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.

பாராளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டுக்குழுவுக்கு மதிப்பு மிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும்.

ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News