இந்தியா

ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மேலும் தொடரும்- பிரதமர் மோடி

Published On 2025-09-25 12:53 IST   |   Update On 2025-09-25 12:53:00 IST
  • இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
  • இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில் ரஷியாவும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உலகளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எந்த தடைகளும் நம்மை தடுக்கவில்லை.

இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.

சுயசார்பு இந்தியா திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

நமது ஆயுத படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்பு த் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏ.கே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.

அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News