இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் 'விசிட்'- பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

Published On 2023-03-30 19:52 IST   |   Update On 2023-03-30 19:52:00 IST
  • புதிய பாராளுமன்றத்தின் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
  • பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஆகியோர் இரு அவைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகளையும் பார்வையிட்டனர்.

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாக பாராளுமன்றம் கட்டப்படுகிறது.

டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிய பாராளுமன்றத்தை கட்டி வருகிறது. இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்த பகுதி ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன.

கட்டுமான பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திடீரென புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டார். மேலும், அங்கு நடைபெற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் அங்குள்ள பணியாளர்களிடமும் பேசினார்.

பிரதமர் மோடி அங்கு சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஆகியோர் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வசதிகளையும் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News