உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பிக்கள் குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
- தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பியது.
- வெளிநாடு சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதை தடுத்திட மத்திய அரசு தி.மு.க,வின் கனிமொழி, காங்.கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது.
மத்திய அரசு அமைத்த 7 குழுக்களில் 4 குழுக்களில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிவசேனா எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். மற்ற 3 குழுக்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் இடம்பெற்றனர்.
உலக நாடுகளுக்கு சென்று திரும்பிய எம்.பி.க்கள் குழுவினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பிய அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். உலக நாடுகளுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.