நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த திட்டம்.. தேர்தல் ஆணையம் தீவிரம்!
- 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
- பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வரும் 10 ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் (CEO) ஒரு உயர்மட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெறும் மூன்றாவது முக்கிய சந்திப்பு இதுவாகும்.
குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்தச் சூழலில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பாஜகவுக்காக வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் செய்யும் நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக 16 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த SIR திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிந்து நீக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தேர்தல் ஆணையம் வாதிடுகிறது.
பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.