இந்தியா

விமர்சித்து கொண்டே இருப்பது சிலர் வேலை - சுதா மூர்த்தி

Published On 2024-01-28 14:01 GMT   |   Update On 2024-01-28 14:01 GMT
  • இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்தி
  • அக்‌ஷதா மூர்த்தி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

தகவல் தொழில்நுட்ப துறையில் $76 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாக விளங்கும் பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனத்தை, 1981ல் என்ஆர் நாராயண மூர்த்தி, தனது நண்பர்களுடன் துவங்கினார்.

என்ஆர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73).

சுதா மூர்த்தி, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயண மூர்த்தி தம்பதியினருக்கு ரோஹன் எனும் மகனும், அக்ஷ்தா எனும் மகளும் உள்ளனர்.

அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்கள் மகளுக்கும் மருமகனுக்கும், தவறான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என சுதா மூர்த்தி அறிவுரை வழங்கினார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நம்மை குறித்து நாம் செய்யும் பணிதான் பேச வேண்டுமே தவிர நாம் அல்ல. உண்மையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம். நமது செயல் தர்மப்படி சரியானதாக இருக்கும் வரையில் பிறரின் மதிப்பீடுகளை குறித்து கவலைப்படாமல் அவற்றில்தான் ஈடுபட வேண்டும். நீங்கள் நேர்மையாக இருந்து, உங்கள் நாட்டிற்கு பணியாற்றி வந்தால் மக்கள் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். அதை புறக்கணித்து விடுங்கள். உங்கள் செயலுக்கு எவரும் சாட்சியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; கடவுளே சாட்சி. உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்; அவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். அவர்களின் தகாத வார்த்தைகள் உங்களை சில சமயம் அதிகம் பாதிக்கலாம். அவர்கள் விமர்சித்து பேசினாலும், நீங்கள் உங்கள் கடமையை செய்ய பழகி கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதா மூர்த்தி கூறினார்.

"குடும்ப உறுப்பினர்கள் எனும் முறையில் பரஸ்பர அன்பும், அரவணைப்பும் எங்களுக்குள் உண்டு. ஆனால், அந்த எல்லையை தாண்டி நாங்கள் இரு நாட்டு விஷயங்களை குறித்து பேசுவதில்லை" என நாராயண மூர்த்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News