இந்தியா

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி: தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

Published On 2023-06-10 08:16 IST   |   Update On 2023-06-10 08:16:00 IST
  • வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
  • இந்திய தேர்தல்கள், உலகின் மிகப்பெரிய அமைதிகால நகர்வாக பாராட்டப்படுகிறது.

புதுடெல்லி :

டெல்லியில் 2022-ம் ஆண்டு பிரிவில், இந்திய வெளிநாடு பணி அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெறுபவர்களிடையே தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் பேசினார். 'இந்தியா-ஜனநாயகங்களின் தாய் மற்றும் தேர்தல் கமிஷனின் பங்கு' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:-

இந்திய தேர்தல்கள், உலகின் மிகப்பெரிய அமைதிகால நகர்வாக பாராட்டப்படுகிறது. தேர்தல் பணியாளர்களையும், தேர்தலுக்கான பொருட்களையும் அந்த அளவுக்கு சிறப்பாக கொண்டு சேர்த்து வருகிறோம்.

ஜனநாயகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டதாக உலக அளவில் கவலை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், 1952-ம் ஆண்டில் இருந்து இந்தியா வெற்றிகரமாக நடத்தி வரும் தேர்தல்கள், இந்தியாவின் தேசிய வலிமைக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள், நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு சவாலாக உள்ளன.

கடந்த ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் மொத்த இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில், தகுதியுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களுக்கு ஆன்லைனில் ஓட்டு போடும் வசதியை அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்துள்ளது. அதை அமல்படுத்துவதில் உள்ள சவால்களை களைவது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News